ஊட்டி, மார்ச் 21: குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராமசந்திரன் குன்னூர் பகுதியில் உள்ள தந்திமாரியம்மன் கோயில் சேவா சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார். ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான ராமசந்திரன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கிய நிலையில், தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராமசந்திரன், குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சேவா சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.
குன்னூர் மேல் பள்ளிவாசல் பகுதிக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் குன்னூர், கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்திந்து வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களிடமும், படுகர் சமுதாய மக்களின் முக்கிய தலைவர்களை வேட்பாளர் ராமசந்திரன் நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரித்தார். குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் 910 கடைகள் உள்ளன. நகராட்சி கடைகளுக்கு 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மறுவரையறை என்ற பெயரில் பல மடங்கு வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது 3 மடங்கு வாடகை உயர்ந்துள்ளது. வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 23ம் தேதி முதல் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்புக்கொடி ஏற்றுவதாக வியாபாரிகள் தீர்மானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குன்னூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரன் மார்க்கெட் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகளிடம் வாடகை உயர்வு குறித்து கேட்டறிந்தார். பின்னர் குன்னூர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக வாடகை உயர்வு குறித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.