×

பாமக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருப்போரூர், திருக்கழுக்குன்றத்தில் ஓபிஎஸ், அன்புமணி பிரசாரம்

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய  இரு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:  திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திருக்கச்சூர் ஆறுமுகம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்கக்கோரியும், தொல்லியல் துறை தடையை நீக்க  கோரியும் நடைபெற்றபோராட்டங்களில் பங்கேற்றவர். சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை கேட்ட உறுப்பினர் என்ற பெயர் பெற்றவர்.

 உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது தமிழக அரசு திறமையான பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டது.   ஒரு விவசாயி முதல்வராக இருப்பதால்தான் மக்கள் பிரச்னைகள் புரிந்து அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. திருப்போரூர் தொகுதியில் 44 கிராமங்களை ஒருங்கிணைத்து துணை நகரம்  அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தபோது அதை எதிர்த்து பாமக தான் போராட்டம் நடத்தியது. அதன்மூலமாக இப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டன. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மாதம் 1500 ரூபாய்  வழங்கும் திட்டமும், ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கும் திட்டமும் மிகவும் பாராட்டத்தக்க திட்டங்கள் ஆகும்.

 இப்பகுதியில் அதிக அளவில் வாழும் மீனவ மக்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு நிச்சயமாக ஏற்படுத்தப்படும். அனைத்து சமூக மக்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அனைவருக்கும் சமூக நீதி சரியாக சென்று சேர பாமக  பாடுபடும். அதுதான் எங்களது கொள்கை. அந்த கொள்கையை எடுத்துரைக்க திருக்கச்சூர் ஆறுமுகத்தை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம்  எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் எஸ்.குமரவேல், பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன், புரட்சி பாரதம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க. மண்டல தலைவர் கோபி, தமிழ் மாநில  காங்கிரஸ் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். செய்யூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க   துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்  நேற்று முன்தினம்  இரவு திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்து வாக்கு சேகரித்தனர்.

Tags : Anbumani ,BJP ,AIADMK ,Thiruporur ,Thirukkalukkunratty ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...