×

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை குங்குமபுரம் பகுதி மக்களுக்கு பட்டா பெற்று தருவேன் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம்

திருவெறும்பூர், மார்ச் 20: திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை குங்குமபுரம் மக்களுக்கு இன்னும் 2 மாதத்தில் பட்டா பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தார். திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான் கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குங்குமபுரம் பகுதியில் பேசியபோது, இப்பகுதியில் மிக முக்கியமான பிரச்னையாக வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் உள்ளது. திமுக கடந்த 10 வருடமாக ஆட்சியில் இல்லை.

நமது கூட்டணி கட்சி வேட்பாளரான திருநாவுக்கரசர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் உங்களுக்கு பட்டா பெற்று தர உரிய வேலையை தொடங்கினார். அப்போது 100 பேருக்கு முதல்கட்டமாக பட்டா தருவதாக கூறினர். பட்டா கொடுத்தால் அனைவருக்கும் கொடுங்கள் இல்லை என்றால் தேவையில்லை என்று கூறிவிட்டேன். உங்களை சந்திப்பதே எனக்கு தர்ம சங்கடமாக உள்ளது. எப்படியாவது உங்களுக்கு பட்டாவை பெற்றுக் கொடுத்து உங்களது பாராட்டை பெற வேண்டும் என நானும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இன்னும் 2 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்துவிடும். உடனடியாக அனைவருக்கும் பட்டா கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன், நிர்வாகிகள் புலவர் மனோகரன், சாந்தகுமாரி, அப்துல் குத்தூஸ், ஞானதீபம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மதிமுக வேலுச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Thiruverumbur Vazhavanthan Kottai ,Kungumapuram ,DMK ,Anbil Mahesh Poyamozhi ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...