×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு

புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறையில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கும் வகையில் கணினியின் மூலம் முதல்கட்ட சுழற்சி முறையில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பிரித்து வழங்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கடந்த 10ம் தேதி நடந்தது.

இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் 3,401 பேலட் யூனிட், 2,331 கன்ட்ரோல் யூனிட், 2,482 விவிபேட் இயந்திரங்களும் முதல்கட்ட சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை, இலுப்பூர், புதுக்கோட்டை, திருமயம் மற்றும் ஆலங்குடி தாசில்தார் அலுவலகங்களிலும், அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமரா, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள், தீயணைப்பான்கள், கண்காணிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறைகள் 2 அடுக்கு பாதுகாப்பு முறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு மின்னணு இயந்திர பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார். எஸ்பி பாலாஜி சரவணன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், தாசில்தார் முருகப்பன் உடனிருந்தனர்.

Tags : Pudukkottai Assembly ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு