×

திருவில்லிபுத்தூர் பஸ்ஸ்டாண்டில் அரசு-தனியார் பஸ் டிரைவர்கள் மோதல் நுழைவுவாயிலில் பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

திருவில்லிபுத்தூர் மார்ச் 20: சிவகாசியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் நேற்று திருவில்லிபுத்தூர் வந்தன. திருவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்குள் வந்தவுடன் யார் பஸ்சை முதலில் எடுப்பதில் தனியார்- அரசு பஸ் டிரைவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதனால் அரசு பஸ் டிரைவர் பஸ் நிலையத்திலிருந்து எந்த பஸ்சும் வெளியேற, உள்ளே வராத வகையில் அரசு பஸ்சை குறுக்கே நிறுத்தினார். அதன்பின்னே தனியார் பஸ்சையும் நிறுத்தி விட்டனர். இதனால் பஸ்நிலைய நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தினால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தகவலறிந்து வந்த திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் தனியார்- அரசு பஸ் டிரைவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதன்பின்னரே பஸ்நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘அடிக்கடி தனியார்- அரசு பஸ் டிரைவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்றனர்.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...