அரியலூர், மார்ச் 20: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரியலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரனை ஆதரித்து நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அரியலூரில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி மக்களின் நிலை அறிந்து அம்மா சிறப்பு முகாம்களை நடத்தி 9.70 லட்சம் மனுக்களை பெற்று குறைகளை தீர்த்து வைத்துள்ளோம் என்றார். மேலும், அரியலூரில் மக்களின் நலன் கருதி மருத்துக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை, ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி, கொள்ளிடம்,
மருதையாற்றில் புதிய உயர் மட்ட பாலங்கள் என அதிமுக ஆட்சியில் அரியலூருக்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், இலவச கேபிள் டிவி இணைப்பு, வாஷிங் மிஷின் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார். தேர்தல் பிரசார கூட்டத்திற்கு கூட்டணி கட்சியினர், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வந்திருந்தனர்.