×

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கமுதி, மார்ச் 20: கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை துவங்கினர். விழாவில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். 16 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 30ம் தேதி கோவிலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு காணிக்கை செலுத்துவர். அன்று நள்ளிரவு கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளில் பக்தர்கள் உருண்டு கொடுத்தும், கோவிலை சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். பின்னர் 31ம் தேதி ஏராளமானோர் உடல் முழுவதும் சேறுபூசி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

மேலும் அக்கினிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, பூக்குழி இறங்குதல், கரும்பாலை தொட்டில் போன்ற நேர்த்திக் கடன்களும், சிலர் வேல்குத்தியும், 101 சட்டி எடுத்தும் நேர்த்திக் கடன்களை செலுத்துவர். அடுத்த மாதம் 2ம் தேதி 2001 திருவிளக்கு பூஜை நடைபெறும். 3ம் தேதி முளைப்பாரி திருவிழாவில், மேளதாளங்களுடன், கரகாட்டம், ஒயிலாட்டம் சிலம்பாட்டத்துடன் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து கொண்டு குண்டாற்றில் கரைக்கும் திருவிழாவுடன்
பங்குனித்திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறையார்கள் செய்து வருகின்றனர்.

Tags : Kamuthi Muthumariamman Temple Panguni Pongal Festival ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...