பரமக்குடி, மார்ச் 20: பரமக்குடி தொகுதியை முழு வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற பாடுபடுவேன் ஆகவே மீண்டும் அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் பொது மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் எம்எல்ஏ போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி, போகலூர், மந்திவலசை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதைத்தொடர்ந்து பரமக்குடி, கமுதி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு கிடைத்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு நான் அரசியலுக்கு வந்துள்ளேன். ஆகவே தொடர்ந்து பரமக்குடி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியமாகும்’’ என்றார்.
அவருடன் வேளாண்மை விற்பனை குழு தலைவர் நாகநாதன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, போகலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜே.எஸ்.கே.லோகிதாசன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்னவனூர்சந்திரன், கருசிங்கராஜ் உள்பட ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.