சென்னை: தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தாம்பரம் தொகுதியில் பட்டா வழங்கும் தனி அலுவலகம் அமைத்து ஏழை, எளிய மக்கள் 35 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறேன். தாம்பரம் தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மேற்கு தாம்பரத்தில், துணை மின் நிலையம், சானடோரியம் பகுதியில் நீதிமன்றம், தாம்பரம் மற்றும் சிட்லபாக்கத்தில் மேம்பாலங்கள், தாம்பரத்தில் இருக்கின்ற பேருந்து நிலையம் என அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
இது போன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தாம்பரம் தொகுதிக்காக திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில், 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ இவ்வாறு அவர் பேசினார்.