சீர்காழி, மார்ச் 19: சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாரதி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாரதிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சீர்காழி தொகுதி புத்தூரில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அண்ணன் பெருமாள் கோவிலில் ஆர்டிஓ அலுவலகம் கட்டும் பணி துவங்கியுள்ளது. வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் வழியாக கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கிட்டி அணை கட்டும் பணி துவங்கியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். கேபிள் கனெக்சன் இலவசமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். வாஷிங்மெஷின் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். விவசாயிகளுக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றார். பிரசாரத்தின்போது பாமக, பாஜக, தமாகா ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.