×

திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் மு.க. ஸ்டாலின் முதல்வராவது உறுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

சாத்தான்குளம், மார்ச் 19: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வருவது உறுதி என சாத்தான்குளத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி  வேட்பாளர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.   மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சாத்தான்குளத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை  வகித்தார். சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, சக்திவேல், பிச்சிவிளை சுதாகர், பார்த்தசாரதி, ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், பார்த்திபன்  முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் வேணுகோபால் வரவேற்றார். கூட்டத்தில் வைகுண்டம்  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை அறிமுகப்படுத்தி அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,‘‘நமது வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை அமோக வெற்றிக்காக அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சாத்தான்குளம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றியும், திருச்செந்தூர் தொகுதியிலும் என்னுடைய வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல் திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் அமோக வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராக வருவது உறுதி. முதல்வரானதும் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவேன் என உறுதியளித்தாரோ அத்திட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்களுக்கு போய் சேர நிலையான நடவடிக்கை எடுத்து நிறைவேற்றுவார்’’ என்றார். இதைத்தொடர்ந்து  வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசுகையில், ‘‘வைகுண்டம் தொகுதியின் நலனுக்காக அரும்பாடு படுவேன். சாத்தான்குளம் பகுதியில் என்னென்ன குறைபாடுகள் உண்டு என்பதை அறிந்து தீர்த்துவைப்பேன். எனக்கு கை சின்னத்தில் வாக்கு தாருங்கள்’’ என்றார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வக்கீல் புதுக்கோட்டை செல்வம், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகேந்திரன், விசிக தென்மண்டல அமைப்பாளர் தமிழினியன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் திரவியம்   பேசினர்.  கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் போனிபாஸ், மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாசலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் உமரிசங்கர்,நகரச் செயலாளர் மகாஇளங்கோ,  மாநில திமுக செயற்குழு உறுப்பினர்கள் இந்திராகாசி, பசுபதி, மாவட்டப் பிரதிநிதிகள் அலெக்ஸ் பிரிட்டோ, சரவணன்,  நகர காங்கிரஸ் துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்டப் பிரதிநிதி யோக பாண்டியன், மதிமுக  கலை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் மகராஜன், மதிமுக ஒன்றியச் செயலாளர் பலவேசபாண்டியன், நகரச் செயலாளர் ஜெயராஜன், விசிக ஒன்றியச் செயலாளர்கள் ஜெயராமன், செந்தில் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார். முன்னதாக சாத்தான்குளம் வருகை தந்த  வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜூவுக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர், பழைய நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : DMK ,Anita Radhakrishnan ,Stalin ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...