நாங்குநேரி, மார்ச் 19: நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் நேற்று நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் குழந்தைசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் நெல்லை எம்பி ஞானதிரவியம், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து ரூபி மனோகரன் தனது பிரசாரத்தை தொடங்கினார். நாங்குநேரி பேரூராட்சி பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் காமராஜ், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின், நகர செயலாளர் வானமாமலை உள்பட பலர் உடன் சென்றனர். முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்த ரூபி மனோகரனுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் மற்றும் கூட்டணி வரவேற்பளித்தனர்.தொடர்ந்து ரூபி மனோகரன், நேற்று மாலை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளை கேடிசி நகரில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு பாளை வட்டார தலைவர் டியூக் துரைராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்டம் ஜெயகுமார், வக்கீல் காமராஜ், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், மகிளா காங்கிரஸ் குளோரிந்தாள் உள்பட பலர் பங்கேற்றனர்.