களியக்காவிளை, மார்ச் 19: குமரி கேரள எல்லையில் படந்தாலுமூடு, களியக்காவிளை, அதங்கோடு, கோழிவிளை, பனச்சமூடு, செருப்பாலூர், செங்கவிளை, கண்ணநாகம், காக்கவிளை, கண்ணுமாமூடு, நிலமாமூடு, இஞ்சிவிளை, குளத்தூர், செறுவல்லூர் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் களியக்காவிளை, அடைக்காகுழி, தேவிகோடு, கொல்லங்கோடு, ஏழுதேசம், மெதுகும்மல், குளப்புறம், புலியூர்சாலை உள்ளிட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ளன. பாறசாலை, காரோடு, குளத்தூர், வெள்ளறடை உள்ளிட்ட ஊராட்சிகள் கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இப்பகுதி மக்களை பொறுத்தவரை கேரள, தமிழக கிராமங்களில் எந்த பாகுபாடிமின்றி புழங்கி வருகின்றனர். சிலருக்கு வீடு தமிழகத்திலும் தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் கேரள பகுதிகளிலும் அமைந்துள்ளன. படந்தாலுமூடு உள்ளிட்ட சில பகுதிகளில் சிலரின் வீட்டின் முன்பகுதி தமிழகத்திலும் பின்பகுதி கேரள பகுதியிலும் அமைந்துள்ளன. திருமண பந்தங்களும் இரு மாநில பகுதிகளிலும் மேற்கொள்கின்றனர்.
இதனால், கேரளா மற்றும் தமிழகம் என இரு மாநிலங்களில் ரேஷன் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நேரங்களில் இரு மாநிலத்திலும் வாக்களிக்கின்றனர். இதனை தடுக்க தமிழக ேகரள மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எவ்வித பயனுமில்லை. தேர்தல் முகவர்களாக பணி செய்த அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் இரட்டை வாக்காளர்களை கண்டறிந்து, தகவல் தரும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக எல்லைப் பகுதிகளில் கேமரா அமைத்து வாக்கு சாவடிகளுக்கு வருபவர்களை தீவிர விசாரணை நடத்திய பின்னரே வாக்களிக்க அனுமதித்தனர்.
சுமார் 2 ஆயிரம் வாக்காளர்கள் இரு மாநிலங்களிலும் வாக்குரிமை வைத்துள்ளனர். தமிழக பகுதிகளில் வசிப்பவர்கள் கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அதிகாரிகள் தீவிர கெடுபிடிகள் காட்டினர். இதன் காரணமாக கேரளாவிற்கு தமிழக பகுதிகளில் இருந்து வாக்களிக்க சென்றவர்கள் வெகுவாக குறைந்தனர். இதுபற்றி கேரள வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 50 ஆண்டுகளாக இரட்டை வாக்காளர்கள் பிரச்னை எல்லை பகுதி கிராமங்களில் நிலவுகிறது. குமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் தேர்தல் நடந்தால் மட்டுமே எங்காவது ஓரிடத்தில் மட்டும் வாக்களிக்க முடியும். வெவ்வேறு தினங்களில் வாக்களிப்பு எனில் தீவிர கவனம் செலுத்த ேவண்டும். இரட்டை வாக்காளர்கள் இரு இடங்களில் ஓட்டுப் போடுவது உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை நிச்சயம் உண்டு என்றார்.