சுசீந்திரம்,மார்ச் 19: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பு இருந்து நேற்று மாலை காங்கிரஸ் திமுக வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கியது. காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அப்போது வேட்பாளர் ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசியது: இந்தப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து உள்ளேன். மீண்டும் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பேன் .கோயில் தெப்பக்குளம் தூர்வாரி சுத்தம் செய்வதற்கு நான் பலமுறை கூறியும், இந்த ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை .நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் குளம் தூர்வாரப்படும் என்றார்.
பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் பேசும்போது, எனது தந்தை, இந்தப் பகுதியில் கலையரங்கம் கட்டி தருவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். நான் பாராளுமன்ற உறுப்பினராக ஆனவுடன் கலையரங்கம் உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன். அதுபோல் கும்பாபிஷேகம், தெப்பக்குளம் தூர் வாருவது ஆகியவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். எனவே காங்கிரசுக்கு கைச்சின்னத்திலும், திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்றார். பிரசாரத்தின்போது திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, பொறியாளர் அணி பார்த்தசாரதி, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், திமுக பொறுப்பாளர்கள் பெர்னார்ட், லிவிங்ஸ்டன், பூதலிங்கம் பிள்ளை, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கில் ராதாகிருஷ்ணன், தங்கம் நடேசன், கால பெருமாள், விடுதலைச்சிறுத்தைகள் பொறுப்பாளர் பகலவன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உட்பட கூட்டணி கட்சி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.