×

ஜவுளி மற்றும் தோல் பதப்படுத்துதல் தொழில்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: ஜவுளி மற்றும் தோல் பதப்படுத்துதல் தொழில்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?, என்று மக்களவையில் திமுக எம்பி, டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார். திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை  இணை அமைச்சர் சோம் பிரகாஷிடம், மத்திய அரசின் சுயசார்பு திட்டத்தின் கீழ், தயாரிப்பு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கொள்கைக்கு மாறாக, ஜவுளி மற்றும் தோல் பதப்படுத்துதல் தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றனவா, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, அரசு ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளதா என விரிவான கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை  இணை அமைச்சர், ஜவுளி மற்றும் தோல் பதனிடுதல் தொழில் துறைகளில், 2019-20ம் ஆண்டில் சுமார் 14 விழுக்காடு அளவிற்கு, 450 லட்சம் பெண்கள் மற்றும் கிராமப்புற பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

2021-22ம் ஆண்டில், முதலீடுகளை பெருக்கவும்,  வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஜவுளித்துறையை மேம்படுத்த, ஏழு ஜவுளி பூங்காக்களும், உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தோல் பதனிடுதல் மற்றும் காலணி தயாரிப்பு துறையை மேம்படுத்த, தோல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, காலணி தயாரிப்பு, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ஆகிய ஏழு திட்டங்கள் ரூ.250 கோடி செலவில், 536 தொழிற்சாலைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, தோல் பதனிடுதல் மற்றும் காலணி தயாரிப்புத் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், 12க்கும் மேற்பட்ட மாசு சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ரூ.130 கோடி செலவில், சென்னை, ஐதராபாத் போன்ற ஏழு நகரங்களில், காலணி தயாரிப்பு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பதிலளித்துள்ளார்.

Tags : DR ,Palu ,Lok Sabha ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...