×

3வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் கலசபாக்கம் அருகே பரபரப்பு வாலிபர் கொலையில் நடவடிக்கை கோரி

கலசபாக்கம், மார்ச் 18: கலசபாக்கம் அருகே வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 3வது நாளாக நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கலசபாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் பிரகாஷ்(25). கடந்த 13ம் தேதி மாலை வெளியே சென்ற இவர், மறுநாள் மேலாரணி குன்றுமேடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரகாஷ் சாவில் சந்தேகம் உள்ளது எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.மேலும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 2 நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

இந்நிலையில், 3வது நாளாக நேற்றும் கலசபாக்கம் காவல் நிலையம் எதிரே பிரகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கலால் டிஎஸ்பி பழனி, போளூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிஎஸ்பிக்கள், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.கொலையாளிகளை கைது செய்யக்கோரி 3வது நாளாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kalasapakkam ,
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...