×

போடி தொகுதியில் ஓபிஎஸ்சுக்கு எதிராக மக்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் உறுதி

போடி, மார்ச் 18: போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கு எதிராக பொதுமக்கள் பெரிய மாற்றத்தை தருவார்கள் என்று, திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். தேனி மாவட்டம், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். நேற்று தாசில்தார் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தபின் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற் று தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடும் அரிய வாய்ப்பை திமுக தலைவர் வழங்கியுள்ளார். எனது உயிர் மூச்சு உள்ளவரை உழைத்து பொதுமக்களின் துணையோடு வெற்றி பெறுவேன். திமுக தேர்தல் அறிக்கையே எங்களின் கதாநாயகனாக உள்ளது. போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கு எதிராக பொதுமக்கள் பெரிய மாற்றத்தை தருவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை உள்ளது. கடந்த பத்து வருடமாக ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியை எவ்வித வளர்ச்சியும் இன்றி தரைமட்டத்தில்தான் வைத்துள்ளார்.
துணை முதல்வர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அவருடன் 20 பேர் இருந்தனர். இது குறித்து திமுக புகார் அளித்தது. ஆனால் அடையாளம் தெரியாத 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. சொத்து கணக்கு தாக்கலில் ஓபிஎஸ்.ஸிடம் வெளிப்படை தன்மை இல்லை. ஒளிவுமறைவு எதற்கு? இவர் செய்வது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலையாகவே இருக்கிறது’’ என்றார்.

Tags : DMK ,Thanga Tamilselvan ,OBS ,Bodi ,
× RELATED ஒரே நாடு ஒரே இட்லி சுட பார்க்கிறார் மோடி: போட்டு தாக்கும் கருணாஸ்