×

ஊதியூர் அருகே சாலை விரிவாக்கத்திற்கு தோண்டிய பள்ளங்களால் விபத்து அபாயம்

காங்கயம்,  மார்ச் 18: காங்கயம்-தாராபுரம் ரோட்டில் ஊதியூர் அடுத்துள்ள குண்டடம் பிரிவு முதல் குண்டடம் வரையுள்ள 11 கி.மீ. தூரம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக ரோட்டின் ஒரு பக்கத்தில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் கான்கிரீட் கலவை போட்டு நிரப்பி பின்னர் அதன் மேல் தார் மெட்டல் போட உள்ளனர். இந்த பக்கவாட்டு குழிகளில் சில இடங்கள் கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பாமல் அப்படியே விட்டுவிட்டனர். மேலும் ரோடு பணிகளும் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பப்படாத இடங்களில் வாகன டிரைவர்களை எச்சரிக்கை செய்வதற்காக மண் மூட்டைகளை வரிசையாக வைத்திருந்தனர். அதில் பெருமளவு மூட்டைகள் வாகனங்கள் உரசியதில் குழிக்குள் விழுந்துவிட்டன. அதிகளவு போக்குவரத்து உள்ள இந்த ரோட்டில் புதிதாக செல்லும் வாகன டிரைவர்கள், குறிப்பாக டூவீலரில் செல்வோர் இரவு நேரங்களில் நிலை தடுமாறி விழுந்து எழுந்து சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

குறிப்பாக ஒரம்பபுதூர் பிரிவு அருகே ரோடு வளைவான பகுதியில் உள்ள பள்ளம் எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது டிரைவர்களுக்கு தெரியாதபடி உள்ளதால் பெரியளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே உடனடியாக ரோட்டோர பள்ளங்களை மூடவும், ரோடு விரிவாக்க பணிகளை முழுமையாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்