நெல்லை, மார்ச் 17: நெல்லை தொகுதி இந்து தேசிய கட்சி வேட்பாளரான மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் நூதன முறையில் 3 சக்கர மிதிவண்டியில் மாவிலை, வேப்பிலை கட்டியபடி ஊர்வலமாக வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இத்தொகுதிக்கு இவர் மட்டுமே நேற்று மனுத்தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அரசியல் கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை தொகுதிக்கு போட்டியிடும் இந்து தேசிய கட்சி வேட்பாளரான மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் 3 சக்கர மிதிவண்டியில் மாவிலை, வேப்பிலை கட்டியபடி ஊர்வலமாக வந்து நெல்லை தொகுதி தேர்தல் அதிகாரியான சப் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பழைய பேட்டையைச் சேர்ந்த இவர் வாடகை வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார். மனுத்தாக்கல் செய்தபிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வை உணர்த்தும் வகையில் 3 சக்கர சைக்கிளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தும் மாவிலை மற்றும் தமிழகத்தை பீடித்த பீடைகள் ஒழிந்திட வேப்பிலையுடன் ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்தேன்’’ என்றார்.