×

காரிமங்கலத்தில் முறைகேடுகளால் நம்பிக்கை இழந்த கூட்டுறவு வங்கிகள்

காரிமங்கலத்தில், மார்ச் 17: காரிமங்கலத்தில் முறைகேடுகளால் பொதுமக்களின் நம்பிக்கை இழந்த கூட்டுறவு வங்கிகளில், பெயரளவிற்கு நடந்த விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 15க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினராக உள்ளனர். வங்கிகளில் பயிர்க்கடன், நகை கடன் உள்பட பல்வேறு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கடந்த பல ஆண்டுகளாக நகைக்கடன், பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்து, கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பைசுஅள்ளி, பெரியானஹள்ளி குப்பாங்கரை, மோதூர், காரிமங்கலம் உள்பட பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், அதிக அளவில் முறைக்கேடுகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் வங்கி பணத்தை கையாடல் செய்த பல ஊழியர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணை மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  கும்பாங்கரை வங்கியில், ஏற்கனவே கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்து, பொதுமக்களின் நம்பிக்கை இழந்த நிலையில், தற்போது சில மாதங்களுக்கு முன், மீண்டும் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வழக்கம்போல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில், தவறுகளை மூடி மறைத்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு காலத்தில் நம்பிக்கை பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடந்துவரும் முறைகேடுகளால், பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைகண்டு ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Karimangalam ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்