×

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் 3ம் நாளில் வேட்பு மனு தாக்கல் இன்றி வெறிச்சோடிய தாலுகா அலுவலகங்கள் கே.வி.குப்பத்தில் மட்டும் ஒருவர் மனுத்தாக்கல்

வேலூர், மார்ச் 17: வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் 3வது நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடிய நிலையில் கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் மட்டும் ஒரு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) என 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் காட்பாடி தொகுதியில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 4 பேர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 4 பேரும், கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சீதாராமன் உட்பட 3 பேரும் குடியாத்தம்(தனி) தொகுதியில் அதிமுக சார்பில் ஜி.பரிதா உட்பட 3 பேரும், அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் ஏ.பி.நந்தகுமார், அதிமுக சார்பில் டி.வேலழகன் உட்பட 3 பேரும் என மொத்தம் 16 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து 3வது நாளான நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.அதேநேரத்தில் கே.வி.குப்பம்(தனி) தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஜே.திவ்யராணி நேற்று மற்றொரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்ப்டடுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய 19ம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களில் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Katpadi ,Dam ,Gudiyatham ,KV ,Kuppam ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி