புதுச்சேரி, ஜூலை 28: கோரிமேட்டில் அரசு ஊழியரின் வீட்டை உடைத்து 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பினோத் நவில்சன் (31). தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ெஜன்சி பிரிசில்லா (29). இவர் புதுச்சேரி மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை பினோத் நவில்சன் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார். அவரது மனைவி ஜென்சி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே, பினோத் நவில்சன் வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வரும் விஷ்ணு என்பவர் நேற்று முன்தினம் போன் செய்து தனது வீட்டின் கதவை வெளியே யாரோ பூட்டிவிட்டு சென்றுள்ளதாக பினோதிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, பினோத், ஜென்சிக்கு தகவல் கூறவே, அவர் நேற்று வீட்டுக்கு சென்று பார்த்துபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பக்க கேட்டில் இருந்த பூட்டு மற்றும் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்றுபார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தது. அறையில் உள்ள அலமாரியும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இச்சம்பவம் தொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்துக்கு ஜென்சி தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், கொள்ைள நடந்த வீட்டில் உள்ள தடயங்களை சேகரித்தும், அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் ஜென்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
