தொண்டாமுத்தூர், மார்ச் 16: கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வடவள்ளி சண்முகசுந்தரம் வடக்கு தொகுதிக்குட்பட்ட கணபதி, மணியக்காரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். முன்னதாக, கணபதி பகுதிக்கு உட்பட்ட 46வது வட்டம் பகுதியில் தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர் சாந்தி வரவேற்றார். முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், கணபதி சம்பத்குமார், மாவட்ட நிர்வாகிகள் வடவள்ளி துரைசாமி, குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் சண்முக சுந்தரத்தின் வெற்றிக்கு அரும்பாடு படுவது என உறுதி அளித்தனர். தொடர்ந்து மணியகாரன்பாளையத்திலும் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பல்வேறு இடங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி உதய சூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுகொண்டார். நாளை (17ம் தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் வடவள்ளி விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் சண்முகசுந்தரம் ஏற்புரை நிகழ்த்துகிறார்.