×

வங்கிகள் வேலை நிறுத்தத்தால் ₹150 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தகவல்

சேலம், மார்ச் 16:சேலம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ₹150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் கூறினார்.
பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகள், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு தற்போது தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்டையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்பு, வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும். ஊழியர் குறைப்பை கண்டிக்கிறோம். சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறோம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் காசோலை பரிமாற்றம், பணம் போடுதல், எடுத்தல், வெளியூருக்கு பணம் அனுப்புதல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் பணம் இருக்கும் பணம் எடுக்கலாம். 17ம் தேதியின் மீண்டும் ஏடிஎம்.,களில் பணம் நிரப்பப்படும். இன்று (நேற்று) நடந்த வேலைநிறுத்தம் காரணமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் ₹ 150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (16ம் தேதி) இரண்டாவது நாளாக போராட்டம் தொடரும்.இவ்வாறு சுவாமிநாதன் கூறினர். இதேபோல், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு சேலம் மாவட்டத்தலைவர் சந்திரசேகரன் தலைமை, வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Federation of Trade Unions ,
× RELATED சமாதான திட்டம் கால நீட்டிப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு