தேனி, மார்ச் 16: தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி தேர்தல் விதிமுறைகளை மீறி, அதிமுகவிற்கு ஆதரவராக செயல்படுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேனி கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். தேனி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேனி தாலுகா செயலாளர் பெத்திலீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது உருவப்படங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளது. மேலும், இப்படங்கள் உள்ள இடத்தில் மின்விளக்குகள் அமைத்து, பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடன் கல்லூரி முதல்வர் செயல்படுகிறார். எனவே, கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.