×

கஞ்சா போதையில் பயங்கரம் கத்தியால் சரமாரி குத்தி 2 வாலிபர்கள் கொலை: கொடூர நண்பன் கைது

பள்ளிப்பட்டு, மார்ச் 16: ஆர்.கே.பேட்டை அருகே கஞ்சா போதை தகராறில் வாலிபர்கள் 2 பேரை கொடூரமாக குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆர்.கே.பேட்டை அடுத்த வெடியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப்(22). புதூர்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்(23), பிரசாந்த்(24). நண்பர்களான இவர்கள், கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள், எப்போதும் ஒன்றாக கூலிவேலைக்கு சென்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் போதைப்பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதூர்மேடு பகுதியில் பிரதாப், சஞ்சய் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது, அவர்களிடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் பிரதாப், பிரசாந்த் ஆகியோரை சஞ்சய் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர். இதில், ரத்தவெள்ளத்தில் அவர்கள் துடித்துடித்து சரிந்து விழுந்தனர். இதை பார்த்த சஞ்சய் தப்பி ஒடிவிட்டார். இதனிடையே, சம்பவத்தை பார்த்து ஊர்மக்கள் திரண்டு வந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி முயன்றபோது அவர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கஞ்சா போதையில் சஞ்சய் தனது 2 நண்பர்களை கொலை செய்தது தெரியவந்தது, இதையடுத்து, தலைமறைவான சஞ்சய்யை நேற்று கைது செய்தன். மேலும், இதுபற்றி அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  கஞ்சா போதையில் தனது நண்பர்களையே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...