×

“நீதிமன்றத்திலும் கூட நாய்கள் தொல்லை”- என்ன தான் நடவடிக்கை எடுத்தீங்க.? 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தெரு நாய்கள் பிரச்னையைத் தடுக்க அரசு எடுத்ததாகக் கூறும் நடவடிக்கைகள் வெறும் அறிக்கையளவில் மட்டுமே உள்ளதாகவும், களத்தில் எதுவும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தெருநாய்கள் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து (Suo Motu) விசாரித்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் தெரு நாய்கள் பிரச்னையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என குறிப்பிடப்படும் விஷயங்கள் அரசின் அறிக்கையில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால், நேரில் எதுவும் தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்தது.

மாநிலத்தில் தற்போதும் கூட தினந்தோறும் தெரு நாய் கடி சம்பவங்கள் நடக்கின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே தெரு நாய்கள் விவகாரத்தில் இதுவரை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,Chief Justice ,Supreme Court ,
× RELATED பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது!