சென்னை: பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தாக்கல் செய்திருந்தனர். திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் தாக்கல் செய்திருந்த வழக்கில் விஜயின் வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியிருப்பதாகவும், சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜயின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கின் எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி தெரிவித்தார். இதனை அடுத்து முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
