குளச்சல், மார்ச் 15: பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மார்ச் 9ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. இதையடுத்து எட்டாம் கொடை விழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, நண்பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, மாலை 6.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதையடுத்து மீனபரணிக்கொடை நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.