ஸ்ரீஹரிகோட்டா: கிரஹா ஸ்பேஸ் நிறுவனத்தின் சோலராஸ் செயற்கைக்கோள் விக்ரம்-1 ராக்கெட்டில் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. கிரஹா ஸ்பேஸின் “சோலாராஸ்” நானோ செயற்கைக்கோள் நாளை (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது
இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான “கிரஹா ஸ்பேஸ்” உருவாக்கியுள்ள “சோலாராஸ்” (SOLARAS) என்ற சோதனை நானோ செயற்கைக்கோள், ஸ்கைரூட் நிறுவனத்தின் “விக்ரம்-1” ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோள் அனைத்து சோதனைகளையும் முழுமையாக நிறைவு செய்து, தகுதி சான்று பெற்று, விக்ரம்-1 ஏவுகலனின் மேல்நிலைப் பகுதியில் (upper stage) வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் தற்போது ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஏவுதலுக்கான இறுதிக்கட்ட ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறினால், நாளை (ஜூலை 18, 2026) காலை 11.30 மணிக்கு (இந்திய நேரம்) ஏவுதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுதலின் மூலம், தனது நானோ செயற்கைக்கோளை பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low earth orbit) நிலைநிறுத்தி, தனது தொழில்நுட்பத் திறனை நிரூபிக்கும் முக்கிய மைல்கல்லை கிரஹா ஸ்பேஸ் எட்டவுள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கி வரும் இந்நிறுவனத்திற்கு, இது ஒரு முக்கியமான தருணமாக அமையும்.
