×

சனவேலியில் பயனற்ற சுகாதார வளாகம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 15: சனவேலி கிராமத்தில் பயன்பாடற்று, பூட்டிய நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சனவேலி கிராமத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சில வருடங்களாகவே பூட்டப்பட்டு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இக்கிராமமானது இப்பகுதி மக்களுக்கு ஒரு குட்டி நகரத்தை போன்றது ஏனென்றால், சனவேலி சுற்றுப்புறங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வீட்டு தேவைகளுக்கு ஏதேனும் ஒரு பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஊருக்கு தான் வர வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் இக்கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாத வீட்டில் உள்ளவர்களும் அவசர காலத்திற்கு பாத்ரூம் செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இருக்க கூடிய ஒரு சுகாதார வளாகமும் சுமார் 2 ஆண்டாக பூட்டி வைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே தண்ணீர் வசதி இல்லை என்ற காரணம் கூறி வந்த நிலையில் கடந்த ஆண்டு சுகாதார வளாகம் அருகாமையிலேயே ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் பள்ளி மற்றும் சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே போடப்பட்டது.

ஆனால் இன்று வரை சுகாதார வளாகத்தை சரி செய்து அதற்காக உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை ஏற்றி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.  மராமத்து பணி ஏதும் செய்ய வேண்டிய குறை இருந்தால், அதனை விரைவில் செய்து முடித்து திறக்க யூனியன் நிர்வாகமும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sanaveli ,
× RELATED விவசாயிகளுக்கு மண்வள அட்டை