×

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தென் மண்டல ஐஜி தகவல்

திண்டுக்கல், மார்ச் 15:  திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த 7 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில் தென் மண்டல போலீஸ் ஐஜி முருகன் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இதர வாக்குச்சாவடிகளிலும் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் வழித்தடம் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகள் திரும்பக் கொண்டு வரும் வழித்தடம் ஆகியவற்றில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஜிடிஎன் கலை கல்லூரி ஆகியவற்றில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தென் மண்டல ஐஜி முருகன் அறிவுரை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.

Tags : Additional Police Security South Zone IG ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது