×

டிரைவரை தாக்கி லோடு ஆட்டோ கடத்தல்: 3 வாலிபர்கள் கைது

உத்திரமேரூர், மார்ச் 15: உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மாங்கால் கூட்ரோடு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு புதுச்சேரியை சேர்ந்த பாலாஜி (40) என்பவர், நேற்று முன்தினம் இரவு தனது லோடு ஆட்டோவில் டயர்களை ஏற்றி  வந்தார். அங்கு, டயர்களை இறக்கிவிட்டு, புதுச்சேரிக்கு புறப்பட்டார். பெருநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. காரின் அருகே இருந்த 3 வாலிபர்கள், லோடு ஆட்டோவை நிறுத்தினர். அவசர உதவிக்கு தன்னை  நிறுத்துவதாக நினைத்த பாலாஜி, ஆட்டோவை நிறுத்தினார். உடனே 3 பேரும், பாலாஜியை சரமாரியாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு, அவரிடம் இருந்த ₹200  பறித்து கொண்டு லோடு ஆட்டோவை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி, பெருநகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பெருநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), புருஷோத்தமன் (19), கார்த்திக் (21) ஆகியோர் பாலாஜியை தாக்கி லோடு ஆட்டோவை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், பெருநகர் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், இதுபோல் வேறு ஏதாவது கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டாகளா, இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...