தோகைமலை, மார்ச் 14: தோகைமலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டம் தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் கடந்த 26ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் மலர்விழி உத்தரவின்பேரில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 24 மணிநேரம் வாகனத்தணிக்கை செய்வதற்கு 3 குழுக்கள் கொண்ட பறக்கும் படை அதிகாரிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்பேரில் 24 மணிநேரமும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனத்தணிக்கை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதில் 4 சக்கர வாகனங்கள், சந்தேகிக்கும் 2 சக்கர மோட்டார் வண்டிகள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு கூடுதலாக ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று ஒவ்வொரு வாகனமாக ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று தோகைமலை பகுதிகளில் பறக்கும் படை முதல் குழு அலுவலர் விஜயகுமார் தலைமையில் ஒரு போலீசார், 2 துணை ரானுவப்படை கொண்ட குழுவினர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.