×

16 தபால் நிலையங்கள் மூலம் ஆதார் சேவைகள்

 

தர்மபுரி, ஜூலை 15: தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் ஆதார் சேவைகளைப் பெறும் வகையில், அஞ்சல் கோட்டத்தின் சார்பில் குறிப்பிட்ட 16 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில், தர்மபுரி தலைமை தபால் நிலையம், தர்மபுரி கலெக்ட்ரேட், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, பாப்பாரப்பட்டி, பெரியானஅள்ளி, பாருர், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை உள்ளிட்ட 16 தபால் நிலையங்களில் பொதுமக்கள் ஆதார் சேவைகளை அலுவலக வேலை நேரங்களில் எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய ஆதார் பதிவு (பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்), பெயர், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்தல், கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல், ஆதார் புகைப்படம் புதுப்பித்தல், யூஐடிஏஐ விதிமுறைகளின்படி குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் செய்துக்கொள்ளலாம். பொதுமக்கள் தேவையான அசல் ஆவணங்களான, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ் (புகைப்படத்துடன்), பென்சனர் கார்டு (புகைப்படத்துடன்), சாதிச் சான்றிதழ் (புகைப்படத்துடன்), பாஸ்போர்ட், வங்கி ஸ்டேட்மெண்ட் வங்கி மேலாளர் கையொப்பத்துடன், 3 மாதத்திற்கு உட்பட்ட இபி பில், குடிநீர் வரி ரசீது,

கேஸ் பில், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி செயலர், நகராட்சி கவுன்சிலர், அரசு மருத்துவர் கேஜட்டேடு போன்றவர்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய, இருப்பிடச் சான்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை கொண்டு அருகிலுள்ள ஆதார் சேவை வழங்கும் தபால் நிலையத்தை அணுகி, இச்சேவைகளைப் அனைத்து வேலை நாட்களிலும் எளிதாக பெறலாம். யூஐடிஏஐ நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Aadhaar ,Dharmapuri ,Division ,Dharmapuri Postal Division ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...