×

பள்ளி சிறுமிக்கு ஆபாச செய்கை தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை: புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

 

புதுச்சேரி, ஜூலை 15: வில்லியனூர் அருகே பள்ளி சிறுமிக்கு ஆபாச செய்கை காட்டிய இறைச்சிக்கடை தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வாழ்முனி (34). இறைச்சி வெட்டும் தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாக கருத்துகளை கூறியும், ஆபாசமான சைகைகளை செய்தும் வந்துள்ளார். கடந்த 1-12-2023 முதல் 21-2-2024 வரை இத்தகைய அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார், போக்சோ சட்டத்தில் 12வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்து வாழ்முனியை கைது செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை நீதிபதி சுமதி விசாரித்து, குற்றவாளி வாழ்முனிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

 

Tags : Puducherry POCSO ,Puducherry ,Villiyanur ,Vazhamuni ,Koodapakkam ,
× RELATED தேனீக்கள் கொட்டி பள்ளி மாணவர்கள் படுகாயம்: வேப்பூர் அருகே பரபரப்பு