சென்னை: தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெற்று வருகிறது; வடஇந்திய மாநிலங்களிலிருந்து இத்தகைய கலாச்சாரம் படிப்படியாகத் தமிழகத்திற்கும் பரவியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது: தற்போது நாங்கள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம்.
அரசியல் சூழலலைப் பொறுத்து தேவைப்பட்டால், எதிர்கால தேர்தல்களிலும் இதே உத்தியைக் கடைபிடிக்க இடதுசாரிக் கட்சிகள் தயாராக உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் நிலவும் சூழலைப் பொறுத்து அதற்கான முடிவு எடுக்கப்படும். தற்போது குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. நீங்களும் நானும் அதற்குச் சாட்சிகள். இது நம் கண்முன்னே நடப்பதை நாம் காண்கிறோம்.
இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. வட இந்திய மாநிலங்களிலிருந்து இத்தகைய கலாச்சாரம் படிப்படியாக தமிழகத்திற்கும் பரவியுள்ளது. இது மாநிலத்திற்கு நல்லதல்ல என்பதால் தடுக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலன்களைப் பாதுகாக்கவும், பதவியில் நீடிக்கவும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறார்கள். வாக்காளர்களின் விரலில் உள்ள மை அழியும் முன்பே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால், அது மக்களின் தீர்ப்புக்குச் செய்யும் துரோகம்.
இது ஜனநாயகத்திற்கு ஒரு நெருக்கடி மற்றும் அரசியல் அறநெறிகளை மீறும் செயல். ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, குதிரை பேரத்தை இடதுசாரிகள் எதிர்க்கிறோம். மக்களே ஜனநாயகத்தின் இறுதிப் பாதுகாவலர்கள். அவர்கள் கையில் சாட்டை உள்ளது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் தண்டிப்பார்கள். அவர்களால் மக்களின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்திருந்தாலும், இடதுசாரி முன்னணி தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது. மாநிலம் முழுவதும் எங்களுக்கு அமைப்பு ரீதியான பலமும் ஆதரவாளர்களும் உள்ளனர். எங்கள் பலத்தை சோதித்துப் பார்க்க ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் தவெக அரசுக்கு இடதுசாரி கூட்டணி வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவு, முதல்வர் விஜய் அல்லது அவரது கட்சிக்கானது அல்ல;
மாறாக, மக்களின் தீர்ப்பை மதிப்பதற்கும் ஆளுநர் ஆட்சியை தடுப்பதற்குமே அந்த ஆதரவு அளிக்கப்படுகிறது. எங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் ஜனநாயகத்தைக் காக்கவே இந்த அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம். அரசை சீர்குலைப்பதோ அல்லது கட்டாயப்படுத்திப் பணிய வைப்பதோ எங்கள் நோக்கமல்ல. நாங்கள் அரசின் மீது அழுத்தம் கொடுக்க மாட்டோம்; அதேவேளையில், ஜனநாயக விழுமியங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படுவோம், அதே சமயம் மக்கள் சார்ந்த பிரச்னைகளையும் எழுப்புவோம்.
தவெக இன்னும் தேர்தல் மனநிலையிலேயே உள்ளது. ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான வகையிலான பேச்சுகளையும் செயல்பாடுகளையும் முதல்வர் தவிர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இது பொருந்தும். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் அரசியல் முதிர்ச்சியையும் சிறந்த அரசியல் ஆளுமைக்கான பண்புகளையும் வெளிப்படுத்தியவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* தற்போது நாங்கள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம். அரசியல் சூழலலைப் பொறுத்து தேவைப்பட்டால், எதிர்கால தேர்தல்களிலும் இதே உத்தியைக் கடைபிடிக்க இடதுசாரிக் கட்சிகள் தயாராக உள்ளது.
* தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் நிலவும் சூழலைப் பொறுத்து அதற்கான முடிவு எடுக்கப்படும்.
* தற்போது குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. நீங்களும் நானும் அதற்கு சாட்சிகள். இது நம் கண்முன்னே நடப்பதை நாம் காண்கிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
* அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலன்களைப் பாதுகாக்கவும், பதவியில் நீடிக்கவும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
