×

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் ஒட்டன்சத்திரம் அருகே விநோதம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 14: ஒட்டன்சத்திரம் அருகே கோயில் விழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அடுத்துள்ள வலையபட்டியில் குரும்பாரின மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து சுமார் 300 ஆண்டுகளாக தொடர்ந்து மகா சிவராத்திரி மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் நடந்து. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். இதில் ஒட்டன்சத்திரம், கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோவை, உடுமலை ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nerthikadan Ottanchatram ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது