×

கடமலை- மயிலையில் தகவல் தொடர்பு வசதி இல்லாமல் அவதி தனி செல்போன் டவர் அமைக்க கோரிக்கை

வருசநாடு, மார்ச் 13: கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் தகவல் தொடர்பு வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடமலை- மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, கண்டமனூர் ஆகிய கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்போன் கோபுரங்கள் அமைத்து இப்பகுதி மக்களுக்கு செல்போன் சேவையை வழங்கியது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தரைவழி தொலைத்தொடர்பு சேவையை வழங்கியது. அதன்பின் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் டவர்கள் அமைத்து சேவையை வழங்கி வருகிறது. எனினும் மயிலாடும்பாறை அருகேயுள்ள உப்புத்துறை, ஆத்துக்காடு, கருப்பையாபுரம், ஆட்டுப்பாறை, வாய்க்கால்பாறை மற்றும் வருசநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களில் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவசர நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பதற்கு பல கிமீ தூரம் சென்று செல்போனில் பேசும் நடைமுறை இன்றளவிலும் உள்ளது. எனவே இப்பகுதியில் பிஎஸ்என்எல் சார்பில் தனி செல்போன் டவர் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து இப்பகுதிம மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சிக்னலே கிடைப்பதில்லை. நாங்கள் பல ஆண்டுகளாகவே மலை மேல் ஏறியும், மரத்தின் மேல் ஏறியும் செல்போன் பேசி வருகிறோம். பேசும் நேரங்களை தவிர்த்து  சிக்னல் கிடைப்பதற்காக செல்போன்களை மரத்தில்மேல் தொங்க விட்டு விடுவோம். எங்கள் வாழ்க்கை ‘வம்சம்’ படம் படத்தின் கதை போலே ஆகி விட்டது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தி தர பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kadamalai- Mayilai ,
× RELATED கடமலை-மயிலை பகுதியில் தேன் பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள்