×

ஊராட்சி தலைவரின் வீட்டை உடைத்து 35 சவரன் கொள்ளை: மொய் பணமும் அபேஸ்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திருப்போரூர் அருகே காயார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். (70). கடந்த 2006ம் ஆண்டு காயார் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மனைவி நவநீதம். இவர்களது, மூத்த மகன் தசரதனுடன் சந்திபாட்டை தெருவில் வசிக்கிறார். பக்கத்து வீட்டில் 2வது மகன் சம்பத், 3வது மகன் சுரேஷ் ஆகியோர் வசிக்கின்றனர். இதில் சுரேஷ், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். சுரேஷ் தனது மகள் லித்திகாவின் மஞ்சள் நீராட்டு விழாவை கடந்த 10ம் தேதி இரவு நடத்தினார். இதற்காக வந்த உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம், சொந்த ஊர் சென்றனர். நேற்று  முன்தினம் இரவு சுரேஷ், அவரது மனைவி காமாட்சி, மகள் லித்திகா, மகன் தர்ஷன் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று காலை 9 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பக்கத்து அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 35 சவரன்  நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ₹25 ஆயிரம் மொய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, வயல்வெளி வழியாக கொள்ளையர்கள் வந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்து கொள்ளையடித்தது தெரிந்தது. மேலும் நகைகள் வைத்திருந்த சிறு பெட்டிகள், பைகளைவீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Panchayat ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு