ஓட்டப்பிடாரம், மார்ச் 13: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் புளியம்பட்டி, சிங்கத்தாக்குறிச்சி, ஆலந்தா, அக்கநாயக்கன்பட்டி, மேலப்பூவாணி, ஒட்டநத்தம், ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை ஆய்வு செய்த அவர், அங்கு தேவையான அடிப்படை வசதிகள், அப்பகுதிகளில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுடன் கலந்துபேசியபபடி ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது, மணியாச்சி டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர்கள் தர்மர், கோவிந்தன், முத்து உள்ளிட்ட உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.