×

ஆயுஷ்மான் பாரத்: காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறதா..! நாடாளுமன்ற குழு பரிந்துரை

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. PM-JAY திட்டத்தின் கீழ் தற்போது ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (AB PM-JAY) பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சைகளை வழங்குகிறது.

எனினும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட புற்றுநோய்க்கான இம்யூனோதெரபி போன்ற மிக அதிக செலவாகும் சிகிச்சைகளுக்கு தற்போதைய ரூ.5 லட்சம் காப்பீட்டு வரம்பு போதுமானதாக இல்லை. இது சார்ந்த கவலைகள் எழுந்ததை தொடர்ந்து தீவிர ஆய்விற்கு பிறகு PM-JAY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த, உடல்நலம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதே போல இந்த பரிந்துரை அறிக்கையில், அதிகம் செலவாகும் சில அரிய நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்புச் சிகிச்சைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு சிகிச்சைக்கு தேவையான நிதியை பலரிடம் இருந்து பெற்று சிகிச்சை பெறும் நிதி முறையை செயல்படுத்த வேண்டும். மேலும் மாநிலங்களுடன் இணைந்து நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன. இதுவரை நாடு முழுவதும் 43 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 1.69 லட்சம் கோடி மதிப்பிலான 11.46 கோடி மருத்துவமனை அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ayushman Bharat ,Parliamentary ,Delhi ,Ayushman… ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...