×

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் எள் பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சேதுபாவாசத்திரம், மார்ச் 13: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சங்கவி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தற்சமயம் மாசிபட்ட எள் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இப்பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்திட பூச்சிகளை பொருத்தமட்டில் மிக முக்கியமானது, தண்டுபினைப்பான் மற்றும் காய்பினைப்பான். இவை தண்டு பகுதியினை ஒன்றொடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும், வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதபடுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

இவைகளை கட்டுப்படுத்திட விதைத்த 25,35 மற்றும் 50வது நாட்களுக்கு பிறகு பாசோலோன் 400மில்லி அல்லது மானோகுரோட்டபாஸ் 400 மில்லி அல்லது கார்பரில் 50சதவீத தூள் 400கிராம் இதில் ஏதாவது ஒன்றினை 200லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மற்றொரு சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடி புழுவும் ஒன்று. இப்புழு 60மி.மீ நீளமாகவும், கருமை கலந்த பழுப்பு உடலில் செம்புள்ளிகளுடனும் கருப்பு தலையுடன் காவடி போன்று வளைந்து செல்லும். இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும். இதனை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 750மில்லி மாலத்தியான் அல்லது 400மில்லி பெண்தியான் மருந்தினை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தமட்டில் வேர் அழுகல் நோய் மற்றும் பூவிலை நோயாகும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடிங்கி அழித்துவிட வேண்டும்.வேர்அழுகல் நோயை கட்டுப்படுத்த விதைவிதைக்கும் போதே விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடின் என்ற பூசாணகொல்லி மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். விதைத்து செடி வளர்ந்த பின் இந்நோய் தோன்றினால் 1 சத கார்பன்டாசிம் (1 லிட்டர் தண்ணீருக்கு 1கிராம் மருந்து) மருந்தினை வேரின் அடிப்பாகத்தில் வேர் நன்றாக நனையும்படி ஊற்ற வேண்டும்.இவ்வாறு எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு