×

பேராவூரணி கடைவீதியில் தொடர் திருட்டால் வியாபாரிகள் அச்சம்

பேராவூரணி, மார்ச் 13: பேராவூரணி கடைவீதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.பேராவூரணி கடைவீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பட்டுக்கோட்டை சாலை, முதன்மை சாலை, சேதுசாலை, ஆவணம் சாலை என நான்கு திசைகளிலும் மளிகைக் கடைகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், நகை அடகு கடைகள், அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் கடைவீதியில் பூட்டை உடைத்து கதவை திறந்து பணம், பொருட்களை திருடிச் செல்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவலர் பற்றாக்குறை, குற்றப்பிரிவு போலீசார் இல்லாத காரணத்தால் திருடர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் தொடர் திருட்டு நடைபெறுவதால், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரத்தில் ஆவணம் முக்கத்தில் உள்ள பிரபல மெடிக்கல் கடையில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சேது சாலையில் உள்ள ஒரு மளிகை கடையிலும், மெடிக்கல் கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரன் கூறியது, பேராவூரணி காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாத நிலை உள்ளது. இருக்கும் காவலர்களும் தேர்தல் பணி, நீதிமன்றப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்று விடுகின்றனர். எனவே போதுமான காவலர்களை நியமித்து, ரோந்து செல்லவும், திருட்டுக்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Peravurani mall ,
× RELATED பேராவூரணி கடைவீதியில் கடைக்காரர்கள்...