ராணிப்பேட்டை: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் காந்திராஜை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டு பெறுவதற்காக ஒடிபி நடைமுறையானது கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர், இந்நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா வந்திருந்தனர்.
ஆய்வு செய்த போது நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அமைச்சரிடம்; ஒடிபி நடைமுறையால் 2ல் இருந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக புறநோயாளிகள் சீட்டு பெற முடியாமல் காத்திருப்பதாகவும், சில நோயாளிகள் மயங்கி விழக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். நோயாளிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை என பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் தொடர்ந்து எழுப்பினர். இதனால் அரசு அதிகாரிகள் சற்று திணறி நின்றனர். தொடர்ந்து இருக்கை வசதிகளை அமைத்து தர ஆட்சியர் உடனடியாக மருத்துவ துறை அதிகாரிகளிலுக்கு அறிவுறுத்தினார்.
