×

மீண்டும் தொடங்கிய அமெரிக்கா – ஈரான் மோதல்.!! கச்சா எண்ணெய் விலை 3% அதிரடி உயர்வு!

தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது 3 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் 3 வர்த்தக கப்பல்கள் ஈரானால் தாக்கப்பட்டதை கண்டித்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கி இருப்பதால் சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதால், சக்திவாய்ந்த ராணுவத் தாக்குதலை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானில் சுமார் 80 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவு நடத்தப்பட்ட அமெரிக்கதாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவோ ஈரானின் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.

ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள், கடலோர கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் கட்டமைப்புகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் பிற நாடுகளின் கப்பல்களை கண்காணித்து தாக்குதல் நடத்த தயாராக இருந்த ஈரான் புரட்சிகர காவல் படையின் சிறிய படகுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கூறி இருக்கிறது. மீண்டும் இருநாடுகளுக்கிடையே மோதல் துவங்கியுள்ள நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது கச்சா எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்தது.

இந்திய நேரப்படி காலை 7:15 மணியளவில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.86% உயர்ந்து 75.54 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 3% மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து ஒரு பேரலின் விலை 71.81 டாலராகவும் வர்த்தகமானது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20% பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதால், விநியோகம் தடைபடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Tags : US ,Iran ,Tehran ,Strait of Hormuz ,
× RELATED அர்ஜென்டினாவிடம் எகிப்து வீழ்ச்சி:...