சாயல்குடி, மார்ச் 12: முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியிலுள்ள கோயில்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது, பிரசசித்திப்பெற்ற சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடும் நடந்தது. சாயல்குடி அருகே மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் உடனுரை திருவனந்தீஸ் வரமுடையார் கோயில், மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் ஆகிய கோயில்களில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு யாகங்கள் நடந்தப்பட்டு, சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.
இரவில் பக்தி பஜனைகள், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. சாயல்குடி கைலாசநாதர் கோயில் கருவறையை நள்ளிரவில் பக்தர்கள் வலம் வந்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு தமிழகத்தில் எங்கும் நடக்காத முறையாக கூறப்படுகிறது. இதுபோன்று ஆப்பனூர் மாணிக்கவள்ளி, எம்.கரிசல்குளம், கடலாடி வில்வநாதன், கடுகுசந்தை அழகுவள்ளியம்மன், மூக்கையூர் இருப்பசாமி, இளஞ்செம்பூர் இருளாயி அம்மன் உள்ளிட்ட சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியிலுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள சைவ வழிபாடு கோயில்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. பொதுமக்கள் இரவில் தங்கி சாமி தரிசனம் செய்தும், பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் வழிபட்டனர்.