டமாஸ்கஸ்: சிரியாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அங்குள்ள சொகுசு ஹோட்டலில் அவர் தங்கி உள்ளார். சிரிய அதிபர் அஹ்மத் அல்ஷராவை சந்திக்க, ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரது மாளிகைக்கு புறப்பட்டார். ஹோட்டலை விட்டு அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில், குறிப்பிட்ட ஹோட்டலுக்கு மிக அருகில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன.
மொத்தம் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த உள்ளூர்வாசிகள் திடீரென குண்டு வெடித்ததில் பலத்த சத்தம் கேட்டதாகவும், இதனை தொடர்ந்து புகை மூட்டம் எழும்பியதை காண முடிந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எவ்வித பாதிப்பும் இன்றி முழுக்க முழுக்க பாதுகாப்பாக உள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரின் அரசு முறைப்பயணத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
