மானாமதுரை, ஜூலை 6: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி துருப்பிடித்துக் கிடக்கும் ரோடு ரோலரை அப்புறப்படுத்தவோ அல்லது ஏலம் விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் சாலை பணிகளை மேற்கொள்ள 30 ஆண்டுகளுக்கு முன் ரோடு ரோலர் வாங்கப்பட்டு அதற்கு என தனியாக டிரைவர் நியமிக்கப்பட்டு சாலைப்பணிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு அப்பணியில் ஈடுபட்ட ரோலர் பழுதடைந்ததால் அதை புதுப்பிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டனர். ரோலரை இயக்கிய டிரைவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு டிரைவராக வேலை செய்து சில மாதங்களில் ஓய்வு பெற்றார்.
அதன்பின் அந்த ரோலர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கம் நடைபெறும் இடத்திற்கு அருகில் ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாக அதே நிறுத்தப்பட்ட ரோலரின் முக்கிய பாகங்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன், பராமரிப்பின்றி இரும்புச் சாமானாக மாறி மதிப்பு குறைகிறது. இந்த ரோலர் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயல்படும் சிறப்பு மையம் இயங்கி வருகிறது. ரோலரின் வெளிப்பகுதியில் உள்ள இரும்புப் பொருட்களில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கும் என்பதால் இந்த ரோலரை ஏலம் விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில்., இந்த ரோலர் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. தற்போது இதன் அருகில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரோலர் அருகில் புதர்செடியாக இருப்பதால் விசப்பூச்சிகள் நடமாட்டமும் இருக்கிறது. மேலும் மழைகாலம் ெதாடங்குவதால் டெங்கு ெகாசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இதை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
