திருவாரூர், மார்ச் 12: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய எம்எல்ஏ தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனையொட்டி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் அடியக்கமங்கலம், பெரும்பண்ணையூர், பூந்தோட்டம், திருவிழிமிழலை, ஆலங்குடி, வடுவூர், ஆதிச்சபுரம், ஆலத்தம்பாடி, சங்கேந்தி எடையூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த தடுப்பூசி மையம் இயங்கி வருகிறது.எனவே வரும் 18ம்தேதி நடைபெற உள்ள முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றுடன் பங்கேற்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தேர்தல் அலுவலர் சாந்தா தெரிவித்துள்ளார்.